தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மண்டலமாக மேற்கு மண்டலம் மாறி இருக்கிறது.
கோவையைத் தொடர்ந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கை முதல் ஆக்சிஜன் படுக்கை வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மண்டல வாரியாக கணக்கிட்டால் மேற்கு மண்டலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி வருவது தெரியவந்துள்ளது.
தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டதாகவும் தொற்று கட்டுக்கடங்காமல் பரவ வழிவகுத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் அலட்சியத்தால் தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை மாவட்டம் தொடர்ந்து முன்னியில் இருக்கிறது.
நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 937 பேருக்கு அம்மமாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதேபோல திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் ஆயிரத்து 824 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 731 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 929 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உயரத் துவங்கியுள்ளது.
நீலகிரில் கடந்த 10 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், 3 ஆயிரத்து 333 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாமக்கல்லில் தினசரி பாதிப்பு 852 ஆக அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல தமிழ்நாட்டில் தினசரி உயிரிழப்பு இதுவரை இல்லாத வகையில் 486 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதில் 114 பேர் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி வருகிறது.
அதேவேலை மேற்கு மண்டலத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.