கொரோனா காலத்தில், எங்களுக்கு இந்தியா செய்த உதவியை மறக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்து உள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சென்றுள்ளார். அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் முதன்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளன்கனை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் பிளின்கன் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா காலகட்டத்தில் இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம். தற்போது, இந்தியாவுடன் துணை நிற்க வேண்டிய நேரம் வந்துள்ளது. முக்கியமான சவால்களில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. நாங்கள் இணைந்து கொரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. வலிமையானது. தற்போது அந்த உறவு ஆக்கப்பூர்வமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்சங்கர் கூறுகையில், ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வளர்ந்துள்ளது. வருங்காலத்திலும் அது தொடரும் என நம்புகிறேன். இந்த கடினமான நேரத்தில், வலிமையாக ஆதரவு மற்றும் துணை நின்றதற்காக அமெரிக்காவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜெய்சங்கர், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினை சந்தித்து பேசினார்.