Type Here to Get Search Results !

பள்ளி பாலியல் விவகாரம்.. ஒரே ஒரு புகார் வந்தால் போதும்.. ஆசிரியர் ஆனந்தன் கதை முடிந்தது….!

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பாலியர் விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக் குழு விசாரணை நடத்தி அறிக்கையை அரசுக்கு சமர்பித்துள்ளது.
ஏற்கனவே சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விசாரணை காவல்துறை தரப்பில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியரும் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அப்பள்ளியின் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு வணிகவியல் பாடம் எடுத்துவரும் ஆசிரியரான ஆனந்தன் மீது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 
அவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டுள்ளதாகவும், பல்வேறு வகையில் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் சார்பில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தனிக்குழு அமைத்து சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர் ஆனந்தன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்தும் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் ஆனந்தன் மீது தற்போது வரை நேரடி புகார்கள் ஏதும் காவல்துறைக்கு அளிக்கப்படவில்லை என்றாலும் குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். 
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்ததைத் தொடர்ந்து மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது விசாரணை அறிக்கையை மாவட்ட குழந்தைகள் நலக் குழு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மாணவிகள் தரப்பில் நேரடிப் புகார்கள் பெறப்படும் பட்சத்தில் காவல்துறை தரப்பிலிருந்து உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.