“தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
கரு.நாகராஜன்
விதிகளுக்கு மீறி கட்டடங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவை அகற்றப்பட வேண்டும். மேலும், வாடகை பாக்கிதாரர்கள் மற்றும் முறைகேடாகக் கோவிலில் தொழில் செய்துவருபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களின் சொத்துகள் பட்டியலிட்டு அவற்றை இணையத்தில் பதிவிடுவதுடன் ஒரு கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், கடைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகளையும் வைக்க வேண்டும் என்பதும் என்னுடைய கருத்து.
கோவில் நிர்வாகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதால்தான் அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊருக்குப் பெரியவர்கள் மற்றும் ஆன்மீகத்தில் தேர்ந்தவர்களைக் கோவில்களில் தக்காராக நியமிப்பதற்குக் காரணம் அவர்களின் ஆலோசனை, அனுபவத்தின்மூலம் கோவில் வளர்ச்சி, பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்க, ஆன்மிகரீதியிலான பூஜைகளைச் சரியாக நடத்த, கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை திறம்ப நடத்துவதற்காகத்தானே. அறங்காவலர்களை நியமிக்கும் அரசு அவர்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க மட்டும் ஏன் தயங்குகிறது. அப்போதுதானே நிர்வாகத்தில் நிகழும் மாற்றங்களை பார்க்க முடியும். தமிழகக் கோவில்களின் சொத்துகளைக் கணக்கெடுத்து அவற்றை வருமானம் குறைவாக உள்ள கோவில்களைச் சீரமைக்கப் பயன்படுத்தி, எல்லா கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
இந்து அறநிலையத்துறை
ஆன்மிகம் வளர்ந்து கொண்டிருக்கிறது, இந்து மதம் தழைத்தோங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விழாக்களிலும் பக்தர்கள் கோடிக்கணக்கில் பங்கேற்று இறைவனை வழிபடுகிறார்கள். கொரோனா காலத்திலும் கோவில்களின் வாசலில் நின்று பல ஆயிரம் பேர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இறை பக்தி எந்தளவிற்கு மக்களிடம் வளர்ந்துவருகிறது என்பதைப் புரிந்து இந்து சமய அறநிலையத்துறையைச் சீரமைத்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.