மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை செலவில் ஆகம விதி படி கோவிலின் மேற்கூரை புணரமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் கருவறை மேற்கூரையில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்றுஆய்வு செய்து அதிகாரிகளிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், எம். எல். ஏக்கள் எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, தீ விபத்தில் 25 1 /2 அடி நீளமும், 17 அடி அகலமும் கொண்ட மரத்தால் ஆன மேற்க் கூரை எரிந்து பெரிய பாதிப்பை உண்டாக்கினாலும் கோவில் சன்னிதானம் சேதமடைய வில்லை எனவும், இந்த கோவில் அறநிலையத்துறை செலவில் ஆகம விதி படி புணரமைக்கப்படும், தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் உதவி காவல் கண்காணிபளார், வன துறை அலுவலர், அறநிலையத்துறை அதிகாரி உட்பட நான்கு பேர் குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முதற்கட்ட மாக பூஜாரி, மேல் சாந்தி உட்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ள தங்கத்தால் வேயப்பட்ட மேற்கூரை குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து விட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இந்த தீ விபத்தை அரசியல் லாவாணி பாடுவதற்காக எடுத்துக் கொள்ள கூடாது என்றும், 4 கால் பாய்ச்சல் என்பதை தவிர்த்து 8 கால் பாய்ச்சலில் கோவிலை போர்க்கா அடிப்படையில் புனரமைத்து தருவோம் என்றும் தெரிவித்தார்.