மெஹுல் சோக்சியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரச் சென்ற அதிகாரிகள் குழு, தாயகம் திரும்பியது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு தப்பிச் சென்றார். சமீபத்தில் ஆன்டிகுவாவில் இருந்து கியூபா தப்பிச் செல்ல முயன்ற சோக்சி, பக்கத்து தீவு நாடான டொமினிக்காவில் கைதானார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர, சி.பி.ஐ., அமலாக்க துறையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் டொமினிக்காவுக்கு சென்றனர்.
டொமினிக்கா உயர் நீதிமன்றத்தில், சோக்சியை நாடு கடத்தும் வழக்கு விசாரணை வந்த போது, விசாரணையை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றி, சோக்சியின் வழக்கறிஞர் களும், டொமினிக்கா அரசு வழக்கறிஞர்களும் ஆலோசித்து முடிவு செய்வதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சோக்சியை அழைத்து வர டொமினிக்காவுக்கு சென்ற இந்திய அதிகாரிகள் குழு, தாயகம் திரும்பியது.