ஊத்துக்கோட்டையில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களுடன், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்றை மடக்கிய போது நிற்காமல் சென்றது. காவல்துறையினர் அதனை விரட்டிசென்று மடக்கிய போது மேலும் ஒரு காரின் அருகே சென்று நின்றது. காவல்துறையினர் அந்த இரு கார்களையும் சோதனை நடத்தியதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்க முயன்ற சித்ராராம் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை, அவற்றைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களைக் கடத்தி வர உதவியர்கள் யார், முக்கிய கடத்தல் கும்பல் குறித்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.