ஞாயிற்றுக்கிழமையன்று வரும் (14-ம் தேதி) காலை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சுமார் ஒரு லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
எனவே, சென்னையில் அந்த நேரத்தில் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் வரக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கல் இல்லை. பிரதமர் வருகையின் போது சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். குறிப்பாக காமராஜர் சாலை, பூவிருந்தமல்லி சாலையில், சென்டிரல் ரயில் நிலையத்துக்கு முன்பு வரை மற்றும் அண்ணா சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, வரும் 14 -ஆம் தேதி சென்னை வர உள்ளாா். சென்னை வரும் அவா், பல்வேறு அரசு திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், பிரதமா் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி.
பிறகு, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி 11.15 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தும், மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மதியம் 1.35 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுகிறார். சென்னையிலிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்தின் புதிய ஆலையை தொடங்கி வைக்கிறார்.