பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை எதற்காகப்பயன்படுத்தி வருகிறோம் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவரிடம், ‘’தி.மு.க. நல்ல கட்டமைப்பில் உள்ளது. ஆனால், பிரசாந்த் கிஷோருடன் இணைந்துள்ளீர்கள். அது எப்படி பயனளித்திருக்கிறது? புதிதாக நீங்கள் கற்றுக்கொண்ட அல்லது தெரிந்துகொண்ட விஷயங்கள் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ’இந்தியாவில் உள்ள, உலகத்திலேயே கட்டமைப்புள்ள ஒரு கட்சி எதுவெனக் கேட்டால், அது தி.மு.க மட்டும்தான். முறையாக தேர்தல் நடத்தி, கிளைக் கழகம், வட்டம், நகரக் கழகமாகட்டும், பகுதிக் கழகமாகட்டும், மாவட்டக் கழகமாகட்டும், தலைமைக் கழகமாகட்டும் எல்லாமே முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். இதுவரை எந்தக் கட்சியும் இப்படி முழுமையாக நடத்தியதாக எனக்குத் தெரிந்து எதுவுமில்லை. தி.மு.க.தான் நடத்தி இருக்கு, இதனை எப்போதுமே சொல்வார்கள்.
இதே பிரசாந்த் கிஷோர் கூட எங்களிடம் வந்து சொன்னது. எனக்கு எந்த வேலையும் கிடையாது. உங்கள் கட்சியில் அவ்வளவு கட்டமைப்பு உள்ளது என்று கூறினார். எத்தனையோ மாநிலங்களில் நான் வேலை செய்து இருக்கிறேன். இவ்வளவு அருமையாக ஒரு கட்டமைப்பு இங்குதான் இருக்கு என்று சொன்னார். அவரை நாங்கள் எதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்றால் இப்போது இருக்கின்ற விஞ்ஞான வளர்ச்சியைப் பொறுத்தவரைக்கும் சிலவற்றை நாமும் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கு.
அதனை நமக்குக் கீழே இருப்பவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கு. அதனால் அதனைப் பயன்படுத்திக்கிட்டு இப்போது இருக்கின்ற ஐ.டி. துறையால் நாட்டின் முன்னேற்றம் வளர்ந்துகிட்டே போய்க்கிட்டு இருக்கு. நாங்கள் அதற்காகத்தான் அவரை பயன்படுத்துகிறோமே தவிர, கொள்கைக்காகவோ, இலட்சியத்திற்காகவோ நாங்கள் பயன்படுத்தவில்லை’’எனக் கூறியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்து வரும் திமுகவினர், ‘’பிரசாந்த் கிஷோர் மீது பல புகார்களை திமுகவினர் தலைமை கழகத்துக்கு அனுப்பி வருகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாகவே இந்தக் கருத்தை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் சமூக வலைதளத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஏன் எங்களது கட்சியில் இருக்கக்கூடிய கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்தவர். அவருக்கு தெரியாத தொழில்நுட்பமா? மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கூட. பிரஷாந்த் கிஷோரைவிட விஷயம் அறிந்தவர். சரி, இருந்துவிட்டுப்போகட்டும். தொழில்நுட்ப விவகாரங்களை மட்டுமே சமாளிக்க பிரஷாந்த் கிஷோரை அழைத்து வர ரூ.360 கோடியை ஏன் செலவழிக்க வேண்டும்? பிரஷாந்த் கிரோர், இந்தியாவிலேயே திமுக கட்டமைப்புள்ள ஒரே கட்சி எனப் புகழ்ந்ததாக கூறுகிறார்.
உண்மையில் பி.கே. ஆலோசகராக வந்த பிறகுதான் திமுகவில் ஏகப்பட்ட குழப்படிகள் நடந்து கொண்டு இருக்கிறது. திருச்சியில் உள்கட்சி பிரச்னை. மதுரையில் ஏகப்பட்ட உள்குத்துகள் என தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட சீனியர்கள் கடுப்படைந்துள்ளனர். உள்கட்டமைப்புள்ள கட்சி என்கிறார்களே, முதலிலின் அழகிரிக்கும்- ஸ்டாலினுக்கும்- கனிமொழிக்கும் உள்ள பாகுபாடுகளை தீர்ப்பார்களா? முதலில் இதனை களைந்துவிட்டு பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளட்டும்’’என்கிறார் அந்த திமுக நிர்வாகி.