அமெரிக்க பாப் பாடகி ரிஹானா டில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டுவீட் இட்டிருந்தார். இந்த டுவீட் கிளப்பிய சர்ச்சை போதாதென்று போராட்டம் தற்போது அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறது.
அமெரிக்காவில் சூப்பர் பவுல் (Super Bowl) எனப்படும் கால்பந்துப் போட்டி மிகவும் பிரபலம். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்வுகளிலேயே அதிக அளவு பார்வையாளர்கள் கொண்ட ஒரே நிகழ்வு இதுதான். இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி ஆட்டம்போல அங்கே சூப்பர் பவுல் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் 30 நொடி விளம்பரம் ஒன்று போடுவதற்கு கட்டணம் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் (40 கோடி!). கலிபோர்னியா பகுதியை சேர்ந்த சீக்கிய சமூகம் இணைந்து நிதி திரட்டி இந்த ஆண்டு சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது. வேளாண் போராட்டங்கள் குறித்து இந்த விளம்பரம் பேசுகிறது.
ரிஹானா டுவீட்டை குறிப்பிட்டு அது இந்தியாவில் உருவாக்கிய அலைகள் குறித்தும் பேசுகிறது. இந்திய அரசின் ஒடுக்குமுறைகள் குறித்தும் சொல்லி போராட்டத்துக்கு அமெரிக்க மக்களின் ஆதரவை கோருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரகசியமாக சில நாட்டு அரசுகள் நிதி அளித்து வருவதாக பல ஆண்டுகளாக பேச்சு உண்டு. இந்திய விவசாயிகள் போராட்டத்தை பெரிதாக்க காலிஸ்தான் தற்போது விளம்பரம் மூலமாக முயல்வதாக தற்போது விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் போராட்டம் குறித்து வெளியாகிய 2 சர்ச்சைக்குரிய இந்தி பாடல்கள் ஏற்கனவே யூடியூப் தளத்தில் இருந்து அதன் நிர்வாகம் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.