Type Here to Get Search Results !

அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில், ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர் செலவு... அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

 


கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலஹங்கா விமான பயிற்சி தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி இன்று (பிப்.,3) துவங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.

கண்காட்சியை துவக்கி வைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கொரோனாவினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கூடியுள்ளதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ராணுவம் மற்றும் விமானம் சார்ந்த துறைகளில் இருந்து உலகின் பெரிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இந்த ஏரோ இந்தியா 21, இந்தியாவின் ஆற்றலையும் பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறையில் நமது நாட்டில் உள்ள வாய்ப்புகளையும் உலக நாடுகளுக்கு எடுத்து காட்டுகிறது.

மாலத்தீவு, உக்ரைன், ஈரான், ஈக்வடோரியல் கினியா, கொமோரஸ் மற்றும் மடகாஸ்கர் நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் நேரடியாகவும், பல நாடுகளின் அமைச்சர்கள் மெய்நிகர் முறையிலும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். நமது பாதுகாப்பு துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டை சேர்ந்த பெரிய மற்றும் கூட்டு பாதுகாப்பு தளவாட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில், ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர் செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பு துறையில் நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு 83 ‛தேஜஸ் எம்கே 1 ஏ ரக போர்விமானங்கள்' தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில், பாதுகாப்பு துறையில் கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். பல முனைகளில் இருந்து இந்தியா அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. ஒரு நாட்டின் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தினால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னை உள்ள பகுதிகளில், அங்கு உள்ள நிலைகளை தன்னிச்சையாக மாற்ற முயற்சி செய்யப்பட்ட சம்பவங்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது, நமது மக்களையும், பிராந்திய இறையாண்மையையும் பாதுகாக்கவும், எந்த சவாலையும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்க இந்தியா விழிப்புடன் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.