சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்ததால் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 27ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக் காலமான 4 ஆண்டுகாலம் முடிந்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பிறகும் சிகிச்சையை தொடர்ந்த சசிகலா பெங்களூருவில் உள்ள இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைப்பு செயலாளர் இ.மகேந்திரனின் மகளின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது, விழா மேடையில் பேசுகையில்;- பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் 7ம் காலை 9 மணியளவில் தமிழகம் வந்தடைவார். அதன்பிறகு வழி நெடுகிலும் அமமுகவினர் அமைதியான முறையில் சசிகலாவை வரவேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சசிகலா தமிழகம் வருவதால் பலரும் அச்சத்தில் இருக்கின்றனர். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள்.
மேலும், சசிகலா விடுதலையான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணிநிறைவு பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. அமமுக என்ற கட்சியை தொடங்கியுள்ளதே அதிமுகவை மீட்டெடுக்கத்தான். யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். ஜனநாயக ரீதியாக போராடி மக்கள் ஆதரவை பெற்று பெற்றி பெறுவோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.