Type Here to Get Search Results !

7 அரசுப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்.... திறந்து வைத்தார் எடப்பாடியார்

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்கொட்டாய் – அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னமேலுபள்ளி – அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கும்மாலபுரம் - அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 9 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பரமத்தி – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் போதுபட்டி – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 5 கோடியே 81 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்; என மொத்தம் 15 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், இராணிப்பேட்டை மாவட்டம், புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பி. முல்லை, பள்ளியில் நடந்த விபத்தின் போது சமயோசிதமாக செயல்பட்டு 26 மாணவர்களை எவ்வித காயமும் இன்றி காப்பாற்றியபோது படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்காக 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாய் சிகிச்சை செலவினம் ஏற்பட்டது. இதனை சிறப்பு நிகழ்வாக கருதி, ஆசிரியைக்கு ஏற்பட்ட சிகிச்சை செலவினத்தை வழங்கும் விதமாக, தமிழக முதல்வர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாய்க்கான காசோலையை ஆசிரியை பி. முல்லை அவர்களுக்கு வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.