டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடந்தது. அப்போது ஒருபிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு ஏற்றப்பட்ட தேசியக் கொடியை இறக்கினர்.
பின்னர் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக விசாரித்து வந்த நிலையில் வன்முறையில் தொடர்புடைய 12 பேரின் புகைப்படங்கள் வெளியானது.
அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வன்முறைக்கும் நடிகர் தீப் சித்துவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீப் சித்துவை தேடி வந்தனர்.
தீப் சித்து பாஜகவை சேர்ந்தவர் என்றும் அவர் பாஜக பிரமுகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. எனினும் தீப் சித்துவிற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் அன்றைய தினம் வன்முறையில் ஈடுபட்டதாக ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோரையும் தேடி வந்தனர். தீப் சித்து குறித்து தகவல் அளித்தால் ரூ 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் மற்ற 4 பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 14 நாட்கள் தேடப்பட்டு வந்த தீப் சித்து இன்று காலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.