“கட்சி பொதுச்செயலாளரைப் பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவதைப் பார்க்கும்போது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் எங்களுடன்தான் வருவார்கள். சசிகலா வரும் வழியில் சில இடங்களில் தடைகள் இருந்தன. அதையெல்லாம் மீறிதான் சென்னை வந்தோம். சசிகலா முதலில் வந்த காரில் உள்ள ஏசியில் பிரச்னை ஏற்பட்டது. அதனால்தான் அதிமுக நிர்வாகி சம்பங்கியின் காரில் சசிகலா சென்னைக்கு வந்தார்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சை புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். அமமுக தொடங்கப்பட்டதே அதிமுகவை மீட்பதற்காகத்தான். அதிமுக மீட்கப்பட்ட பிறகு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவில் தொடர்வார்களா என்பதைப் பேசுவோம். ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகம் செல்வது குறித்து சசிகலாதான் முடிவு செய்வார்.
எங்களை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர்செல்வமோ எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுடைய ஒரே பொது எதிரி திமுக தான்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா வாணியம்பாடியில், “அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, நம்முடைய பொது எதிரி ஆட்சிக் கட்டிலில் ஏறாமல் தடுப்போம்” என்று பேசியிருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரன், “இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் எதிரி அல்ல; திமுகதான் பொது எதிரி” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.