"யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சசிகலா சிறியில் இருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பும்போது அவரை வரவேற்க ஓ.பி.எஸ் செல்வார் என பலரும் தெரிவித்தனர். இது தொடர்பாக இருமுறை அமமுக தலைமையுடன் அவர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சசிகலா வருகை பற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பது பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு வித்திட்டு இருக்கிறது. ஓ.பி.எஸின் நடத்தைகளும், வார்த்தைகளும் எப்போதும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள நிலையில், அவர் இன்று பதிவிட்டுள்ள ட்விட் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.
அந்த ட்விட்டில், ‘’கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை (Feb-9)இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். "யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பாஜகவின் அடிமை அதிமுக என்கிற கருத்துக்கள் தமிழகத்தில் உலவி வரும் நிலையிலும், எடப்பாடியாருடன் மறைமுகமாக இணக்கமில்லாத கூறப்படும் சமயத்திலும், சசிகலா ரிலீசாகி தமிழகம் வந்ததால் அவருக்கு அடிமையாக இருக்க மாட்டோம் என்கிற ரீதியுலும் அவர் ஏதோ ஒரு வகையில் அந்த ட்விட்டை பதிவிட்டுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது. எடப்பாடியாரின் செயல்பாடுகளைக்கூட சில நேரங்களில் புரிந்து கொள்ளக்கூடும். ஆனால், ஓ.பி.எஸின் அனுகுமுறைகள் பல வேளைகளில் சந்தேகத்தை கிளப்புவதாகவே உள்ளது.