நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:
காவிரி டெல்டாவில் இருந்து 15 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் கூட விவசாயிகள் நலன் காக்க எதையும் செய்யவில்லை. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன்.
இதனைத் தொடர்ந்து பிற அமைச்சகங்கள் இந்த விவகாரத்தை பரிசீலிக்க பரிந்துரைத்தார் பிரதமர் மோடி. இதன்பின்னரே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்துக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் உடனடியாக தடையில்லா சான்று வழங்கியது. இதற்காக பிரதமர் மோடிக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் பேசினார்.