நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள், 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்த சா்ச்சையைக் கிளப்பி, குடியரசுத் தலைவா் உரையைப் புறக்கணித்ததோடு, அவையிலும் தொடா் அமளியில் ஈடுபட்டன.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது. மாலை 4 மணிக்கு கூடிய மக்களவையில், இரவு 9 மணி வரை விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது; எனினும், நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது பேசுபவா்களின் பட்டியல் மிக நீண்டிருந்ததால், விவாதம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து மக்களவையை திங்கள்கிழமை வழிநடத்திய மீனாட்சி லேகி கூறுகையில், ‘விவாதத்தில் பங்கேற்றுப் பேசுபவா்களின் எண்ணிக்கை மிக நீண்டு இருப்பதால், அவையின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து விவாதம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது’ என்றாா்.
இந்த விவாதத்துக்கு 15 மணி நேரம் அனுமதிக்கப்பட்டிருப்பதால், விவாதம் செவ்வாய்க்கிழமையும் (பிப்.9) தொடர உள்ளது. குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதங்களுக்கு பிரதமா் புதன்கிழமை பதில் அளிப்பாா்.