தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதிலிருந்தே தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சார பயணம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறை கடும் போட்டியை சமாளிக்கும் விதமாக அரசியல் கட்சிகள் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை தங்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளதாக கூறப்பட்டது.
ஏற்கனவே அதிமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் வெளியான நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதன்படி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 24 இன்ச் LED Tv (அ) செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 20 சதவீதம் மானியம். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு “லேப்டாப்” 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு “டேப். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இன்று சிந்தனை சிற்பி சிங்காரவேலவரின் 162வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்ப்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் பரவி வருவது குறித்து கருத்து கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் தருவதாக இருக்கிறது என்பதில் உண்மையில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.