திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மீதமுள்ள நாட்களிலும் முழுவதுமாக பின்பற்ற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.
கொரோனா ஊரடங்கு விதிகள் உள்ளதால், டிசம்பர் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் பக்தர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சிங்காரவேலன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கொரோனா சான்று தேவையில்லை என்றும், பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்துவிட்டு அனுமதிக்க வேண்டுமெனவும், அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, பிப்ரவரி 12-ம் தேதி வரையிலான மீதமுள்ள நாட்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றும்படி புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தனர்.