தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தற்போது, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கைவைத்துவருகிறது. இந்த நிலையில் வன்னியர்களுக்கு 20% உள் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
பேச்சுவார்த்தையில் பாமக தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், ‘சட்டத்திற்காக மக்களா .... மக்களுக்காகச் சட்டமா? மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல... அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மீண்டும் இரண்டாவது கட்டமாக அமைச்சர் தங்கமணி இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தங்கமணியின் இல்லத்துக்கு அமைச்சர்கள் கேபி அன்பழகன், சி.வி.சண்முகம் வந்தனர். அவரைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி வருகை தந்தார். பா.ம.க சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு மற்றும் தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நிறைவுபெற்றது.