தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று முதலில் அறிவித்தார். ஆனால், அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில், அரசியலில் ஈடுபட்டு கட்சி தொடங்க போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். இது அவரது ரசிகர்களை மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே ரஜினி ரசிகர்கள் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர், ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் சேரலாம் என ரஜினி மன்ற நிர்வாக சுதாகர் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார். ரஜினி 100% இந்த சட்டமன்ற தேர்தலில் வரமாட்டார். லதா ரஜினி கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்தின் மனைவி லதா கட்சி தொடங்குவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை எனவும், அர்ஜுன மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றும் சுதாகர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.