சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 3-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலைச் சுற்றியுள்ள தெற்கு மாட வீதி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு மற்றும் குளத்தைச் சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7.30 மணிக்கு அம்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம், வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.