சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் கெங்கவல்லி ஒன்றிய அதிமுக சார்பில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, அரசின் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை.ரமேஷ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்ரமணியம், பேரூர் செயலாளர்கள் பழனிச்சாமி, சிவப்பிரகாசம், ஒன்றியக்குழுத்தலைவர் பிரியாபாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தம்மம்பட்டி நகர அதிமுக செயலாளர் ஸ்ரீகுமரன் வரவேற்றார். சேலம் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆர்.இளங்கோவன் மற்றும் பேச்சாளர் கோபி காளிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், அரசின் நான்காண்டு கால சாதனைகளை பட்டியலிட்டும், திமுகவின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தும் பேசப்பட்டது.
மேற்கு ஒன்றிய பொருளாளர் பிச்சமுத்து நன்றி கூறினார். இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகி கூடமலை முத்துவேல், மற்றும் ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.