சசிகலா அதிமுகவின் உறுப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது என அவரது சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் சசிகலா. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார் சசிகலா.
இதனை தொடர்ந்து பெங்களூருவில் ஒரு வாரம் ஓய்வெடுத்த அவர் இன்று காலை தமிழகம் புறப்பட்டார். சசிகலா அதிமுக கொடியுடனான ஜெயலலிதாவின் காரில் தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ளனர்.
இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், சசிகலாவுக்கு முன்னதாக என்னுடைய கார்தான் செல்கிறது. கர்நாடகாவில் எந்த ஒரு கெடுபிடியும் இல்லை.
அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்பதற்காக நீதிமன்றத்துக்கு செல்லாமல் போலீசாரை ஏன் தமிழக ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்? சசிகலா அதிமுக உறுப்பினர்தான். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற உரிமை தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
அப்படியான நிலையில் சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை உள்ளது. இதனை மீறி போலீசார் தடுத்தால் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.