முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பாஜகவில் இணைந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அண்ணாமலை தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அண்ணாமலையின் உயிருக்கு பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களால் ஆபத்து இருப்பதாக மாவட்ட போலீஸ் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் தமிழக போலீசின் பாதுகாப்பு சீராய்வு குழுவினர் (SRC) அண்ணாமலைக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இவர் தங்கியுள்ள இடத்தில் 5 போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்பிற்கு செல்லும் வகையில் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் (PSO) செல்ல உள்ளனர். அவர்களில் ஒருவர் பாதுகாவலர் சீருடையிலும், மற்றொரு சாதாரண உடையிலும் இருப்பார். அண்ணாமலை எங்கு சென்றாலும் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மாவட்ட போலீசார் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.