டி.நகரில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ‘சசிகலா நலமுடன் இருக்கிறார். வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார். பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். அவர் மீண்டும் பரதனானார் என ஏற்றுக்கொள்வோம்.
அ.ம.மு.க – அ.தி.மு.கவின் பி டீம் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சிப்பதை கேட்கும்போது சிரிப்பு வருகிறது. மதுரையில் பொது இடத்தில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி சிலை திறக்க அனுமதி அளித்த அ.தி.மு.க எந்த அணி? அ.தி.மு.கவில் ரசாயான மாற்றம் ஏற்பட்டுவருகிறது. அதனால் அமைச்சர்கள் அச்சத்தில் இதுபோன்று பேசுகிறார்கள். திமுகவைப் பார்த்தால் மக்கள் அச்சப்படுகிறார்கள். ஒருபோதும் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை.
பா.ஜ.க – அ.ம.மு.க கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நிச்சயம் அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம். அ.ம.மு.க, அ.தி.மு.க இணைப்பிற்கு பா.ஜ.க எந்த அழுத்தமும் தரவில்லை. அ.தி.மு.க பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் நிச்சயம் வெற்றி பெற்று அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்’’என அவர் தெரிவித்தார்.