தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டில்லியில் பல இடங்களில் போஸ்டரில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
கடந்த புதன் / வியாழக்கிழமைகளில் டில்லியின் கிழக்கே உள்ள கல்யாண்புரியில் 1800 போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதன் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இருந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்தனர். தொடர்ந்து இதன் மறுநாள் டில்லியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 25 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பெரும்பாலானவர்கள், நேற்று மதியம் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
போஸ்டர்கள் அனைத்தும் ஒரே அச்சகத்தில் அச்சிடப்பட்டதா அல்லது ஒருவரோ / அரசியல் கட்சியோ அச்சிட கூறியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் நடந்த விசாரணையில், சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இன்னும் சிலர், போஸ்டர் ஒட்டியதற்கு தங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பணம் கொடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், போஸ்டர் ஒட்டியதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும் என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.