தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி என்பதுதான் அதிமுக ஆகும். அவர்கள் இருவரின் தலைமையின் கீழ் செயல்படும் அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையமே தீர்ப்பு சொல்லிவிட்டது. அதனால் அதிமுக பிரச்னை என்பது எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், டிடிவி.தினகரன் அதிமுகவை மீட்போம் என்று பேசுவதெல்லாம் அவருடைய தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மட்டுமே பயன்படும். வேறு எந்த விதத்திலும் அவருடைய பேச்சு பயன்படாது. தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொவழங்குவதில் எந்தச் சிரமமும் இருக்காது. இந்தியாவில் இன்னும் ஒரு தலைமுறையானாலும் காங்கிரஸ் கட்சியால் எழ முடியாது. புதுச்சேரி அரசு இன்னும் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என்பதே தெரியவில்லை. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அங்கிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸில் இருப்பவர்கள் கட்சியை விட்டு ஓடிவிடுகிறார்கள். காங்கிரஸ் தேவையில்லாத சுமையென திமுகவே கூட நினைக்கிறது” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.