மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், டில்லி - ஹரியானா எல்லையான சிங்கூவில், போராட்டக்காரர்கள் தாக்கியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து, உலோக லத்தி மற்றும் மிகப் பெரிய தடுப்பு கவசத்துடன், போலீசார் பாதுகாப்புடன் இருக்கும் புகைப்படம் சமூக வலை தளத்தில் வெளியானது.
டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலோகத்திலான லத்தி பயன்படுத்த, போலீசாருக்கு எந்த அனுமதியும் தரப்படவில்லை. இது குறித்து அந்த போலீஸ் பிரிவிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.