பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “உத்தரகண்டில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வு குறித்து நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். உத்தரகண்ட் மாநிலத்திற்கு இந்தியா துணை நிற்பதுடன் அங்கு வசிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்கும் நாடு பிரார்த்தனை செய்கிறது. உயரதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தேசிய பேரிடர் மீட்புப் படையை பணியில் அமர்த்துவது, மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் ஆகியவை தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெறுகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “அசாமில் இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட்டின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர உயர் அதிகாரிகளுடன் பிரதமர் பேசினார். அங்கு நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்துள்ளது. வெள்ள பாதிப்பு, மீட்புப்பணி நடவடிக்கைகள் குறித்து உத்தரகண்ட் முதல்வருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.