சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு சசிகலா செல்வதாகவும் அங்கு சிறிது நேரம் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 2017-ஆம் ஆண்டு அவர் திறக்கப்படவிருந்த எம்ஜிஆர் சிலை இன்று திறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்துக் கொண்டு இன்று காலை தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து சசிகலா புறப்பட்டுச் சென்றார். தனது காரில் அதிமுக கொடியை கட்டிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு தமிழக எல்லையான ஜூஜூவாடி செக் போஸ்ட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை செம்பரம்பாக்கத்திலிருந்து திநகர் வரை 32 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு சசிகலா வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மாலை நேரத்திற்கு பின்னர் அவர் வருவார் என்றும் அங்கு அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு அதாவது சசிகலா சிறை செல்லப்படுவதற்கு முன்னர் ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் திறக்கப்படவில்லை. இன்றைய தினம் சென்னை ராமாபுரம் தோட்டத்தில் சசிகலா திறந்து வைத்தார் என கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் எம்ஜிஆர் சிலை திறக்கப்படலாம் என தெரிகிறது. சிலை திறப்பு குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.