முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்கு சென்ற பேரணாம்பட்டு பகுதியில் துப்பாக்கியுடன் இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் 5-ம் கட்ட பயணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்கு சென்ற பேரணாம்பட்டு பகுதியில் துப்பாக்கியுடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பேரணாம்பட்டு பகுதியில் காரில் வந்த நபர் சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதிவிட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார். பின்னர், காரில் தப்பிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்மந்தப்பட்ட நபரின் காரை சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சந்தேகத்திற்கு இடமாக ஆயுதங்கள், பல நம்பர் ப்ளேட்டுகளும் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நபரின் பெயர் அஜீஸ் என்பது தெரியவந்துள்ளது.