மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளான காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் போராட்டம் தொடருகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடிக்கிறது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு சிறப்பு பேருந்து ஒன்றில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்றது.
இந்த குழுவில் தமிழக எம்.பிக்களான கனிமொழி, திருச்சி சிவா, சு. வெங்கடேசன், திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த எம்.பிக்கள் அனைவரையும் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாக 2 கி.மீ. தொலைவிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு போலீசாருடன் எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த முள்வேலி பகுதிகளிலேயே நின்று முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இதனிடையே காசிப்பூர் எல்லையில் போலீசாரின் தடுப்புகளை விவசாயிகளே அகற்றியும் வருகின்றனர். இதனால் காசிப்பூர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.