பெங்களூருவில் ஏரோ இந்தியா 2021 கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தொழில்துறை அமைப்பான ஃபிக்கி கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது.
இதில் கலந்துகொண்டு எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர் ராகேஷ் அஸ்தானா கூறியதாவது:
எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
2019 -ம் ஆண்டில், மேற்குப் பகுதியில் 167 ட்ரோன்கள் செயல்பட்டுள்ளது பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில், இந்த பகுதிகளில் 77 ட்ரோன்கள் காணப்பட்டன.
குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஜம்மு செக்டர்களில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள்களும் பல இடங்களிலும் கொண்டு செல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
பாகிஸ்தான் தனது ட்ரோன் தொழில்நுட்பத்தை கடத்தல் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகிறது.
இவ்வாறு எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர் தெரிவித்தார்.