'தேவேந்திர குல வேளாளர்' என, அழைப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்தது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, பா.ம.க., மற்றும் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட சமுதாயங்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான, மசோதா தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும், சென்னை விழாவில், பிரதமர் மோடி, 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து, எவரும் பேசுவதற்கு முன், நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன், 1989ல், மதுரை தமுக்கம் திடலில், ஒரு தாய் மக்கள் மாநாட்டை, நான் நடத்தியதும், என் மனதில் நிழலாடுகின்றன.
தேவேந்திர குல வோளர்கள் இளைஞர் நல சங்க கூட்டமைப்பு நிறுவனர் தாஸ் பாண்டியன்: தொழில், கலாசாரம், பண்பாடு, ஜாதி கட்டமைப்பு ரீதியாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் முன்னேற்றம் கண்டு விடும். இதற்கு அடித்தளமிட்ட பிரதமர் மோடியை, எங்கள் குலசாமியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வணங்குவர்.தமிழகத்தில், 110 சட்டசபை தொகுதிகளில், எங்களுக்கு ஓட்டு வங்கி உள்ளது. தென் மாவட்டங்களில், 20 சட்டசபை தொகுதிகளில், குறைந்தபட்சம், 90 ஆயிரம் முதல், அதிகபட்சமாக, 1 லட்சத்து, 40 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன.
தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு, ஓட்டு அளித்து, ஏமாந்து வந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள், இனி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தான் ஓட்டுப் போடுவர். எங்களுடைய, 80 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் வகையில், பிரதமர் மோடி அறிவித்துள்ளதை, நாங்கள் வரவேற்கிறோம்; அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.