தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் ஜனநாயக திருவிழா களைகட்டியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள அதிமுக, பாஜக, பாமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த முறை கணிசமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களை பேரவைக்கு அனுப்பியே ஆக வேண்டுமென பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சீட் குறைவாக இருந்தாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தட்டித்தூக்க வேண்டுமென நினைத்த பாஜக, நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், மொடக்குறிச்சி, ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, உதகமண்டலம், திருவையாறு, திருநெல்வேலி, தளி, தாராபுரம் , காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற்றுள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு டெல்லி பறந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சி.டி. ரவி ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை வழங்கி ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் எடுக்கப்பட்ட இறுதி முடிவின் படி இன்று அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. 1. தாராபுரம் (தனி) – எல்.முருகன் 2.காரைக்குடி – எச்.ராஜா 3.கோவை தெற்கு – வானதி சீனிவாசன் 4.ஆயிரம் விளக்கு – குஷ்பு 5.நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி 6.அரவக்குறிச்சி – அண்ணாமலை