புதுச்சேரியில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை போல் புதுவையிலும் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி புதுவைக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
30 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட புதுவையில் பாஜக, என் ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகியவை நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் பாமக 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டது. இதற்கு ஒப்புக் கொள்ளாததை அடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியது.
இதை அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் உறுதிப்படுத்தினார். மேலும் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. புதுவையில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலும் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய நிலையில் புதுவையிலும் பாமக விலகியது குறிப்பிடத்தக்கது.