தங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தங்களின் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்றும், தமிழகத்தில் அதிமுக, திமுக அகற்றப்பட வேண்டிய கட்சிகள் எனவும் தெரிவித்தார். தேமுதிகவை கூட்டணிக்கு வர மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் பொன்ராஜ் அழைத்தது தனக்கு தெரியாது எனக் கூறிய கமல்ஹாசன், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.