இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் அலையை விட இரண்டாவது அலை சற்று வீரியமாகவே காணப்படுகிறது. முதல் அலையில் ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் இந்த இரண்டாவது அலையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.60 லட்சமாகும்.
அது போல் அமெரிக்காவில் 63,169 பேரும் பிரேசிலில் 65,792 பேரும், பிரான்ஸில் 35,861 பேரும், துருக்கியில் 62,606 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 67,123 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37.7 லட்சமாகும். கொடுமையிலும் கொடுமையாக இந்த மாநிலத்தில் ஒரே நாளில் 419 பேர் பலியாகிவிட்டனர்.
மாநிலத்தில் குணமாகி வருவோரின் விகிதம் 81.18 சதவீதமாகவும், இறப்போரின் விகிதம் 1.59 சதவீதமாகவும் இருக்கிறது. இரண்டாவது முறையாக மகாராஷ்டிரத்தில் ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 63,729 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டார்கள்.