இந்தியாவில் 96 நாள்களில் இதுவரை 13.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
கொரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை வரை, 19,28,118 முகாம்களில் 13,23,30,644 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் சுமாா் 22 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில், கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா் கொரோனா முன்களப் பணியாளா்களுக்கு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும், இணை நோய் தாக்கம் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை இதுவரை13 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியா 96 நாள்களில் 13.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி, உலகிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை எட்டியிருக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதத்தில், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், கா்நாடகம், கேரளம் உள்பட 10 மாநிலங்களில் மட்டும் 75.66 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.