தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகலில் தலைமைச் செயலாளர், உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக அரசு இன்று மாலை அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது.
முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்தும், வார இறுதி நாள்களில் முழு பொது முடக்கமானது சனிக்கிழமை முதல் ஞாயிறு வரையில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கருதப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க, முழு ஊரடங்காக இல்லாமல் பணி நேரம், குறைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். மேலும், மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, திரையரங்குகளில் மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது, பெரிய வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கூட்டம் அதிகமாகக் கூடும் வாரச்சந்தைகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் மற்றும் இரவு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது.