Type Here to Get Search Results !

தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது…. மோடிக்கு எடப்பாடியார் கடிதம்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 4,086 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 1,163 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,004 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த பாதிப்பு 10 லட்சத்தை கடந்துள்ளது, அதாவது 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இப்படி தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
தமிழகத்தில் தேவையான அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவை அனைத்தும் தமிழக மக்களுக்கே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டால் தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் என்றும், உடனடியாக அண்டை மாநிலத்திற்கு ஆக்ஸிஜன் கொடுக்கும் விவகாரம் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.