கொரோனா தடுப்பு மருந்துக்கான மூலப் பொருள் சப்ளை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொலைபேசியில் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் – ஆஸ்டிரஜெனகா இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துதான் இது. இதற்கான மூலப் பொருட்களை சீரம் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து பெற்று வருகிறது.
இந்த மூலப் பொருட்கள் சப்ளை முடிந்து போய் விட்டதால் புதிய மூலப் பொருட்களுக்காக சீரம் நிறுவனம் காத்திருக்கிறது. ஆனால் மூலப் பொருள் சப்ளைக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். பெரும் இக்கட்டான நிலையில் இந்தியா இருக்கும்போது இதுபோல தடை போடுவது தவறானது என்று எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக அமெரிக்க இந்தியர்கள் இந்தத் தடையை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து இந்தியாவுக்கு மூலப் பொருட்கள் வழங்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பிடனுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார். அப்போது மூலப் பொருள் சப்ளை தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதுகுறித்து பின்னர் மோடி 2 டிவீட்டுகள் போட்டு தகவல் தெரிவித்தார். அதில், வாக்சின்களுக்கான மூலப் பொருட்கள் சப்ளை தொடர்பாக பிடனுடன் விவாதித்தேன். வாக்சின் மூலப் பொருட்கள் சப்ளை சுமூகமாக நடைபெற வேண்டியது அவசியம். இதை அமெரிக்க அதிபரிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினேன்.
உலகளாவிய கொரோனா சவாலை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெல்ல முடியும். அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. இரு நாடுகளின் கொரோனா நிலவரம் குறித்து விரிவாக பேசினோம். இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிக்கு நான் நன்றி தெரிவித்தேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.