கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகள் நிரப்பியால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும், நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் அதிக பட்சமாக, குழித்துறையில் 105 மில்லி மீட்டர் மழையும், முள்ளங்கானவிளையில் 88 மில்லிமீட்டர் மழையும், கோழிபோர்விளையில் 85 மில்லி மீட்டர் மழையும், பெருஞ்சாணியில் 78.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மேலும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணையில் 1929 கன அடி நீர் வரத்து உள்ளதால், 1750 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், 77 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 65.40 கன அடி நீர்மட்டம் எட்டியுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான சிதறால், திக்குறிச்சி, குழித்துறை, பரக்காணி, அஞ்சாலிகடவு, மாரயபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.