தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பான்மசாலா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது, காவல் உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் போலீசார் எப்போதும் வென்றான் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட நபர் சிவஞானபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் என்பதும் மொபைல்போன் மூலம் பான் மசாலா பொருள்களை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்து அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பான் மசாலா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து எப்போது வென்றான் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதத்தில் 75 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பான்மசாலா புகையிலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்தல், விற்பனை செய்த குற்றத்துக்காக மட்டும் 8 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.