தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்து அதிகாரிகள் வெளியேறிய பிறகு. அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடிதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கலந்துரையாடலின்போது அமைச்சர்களுக்கு பல அறிவுரைகளையும் மு.க. ஸ்டாலின் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணி நியமனங்கள், அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் நியமனம் கூட வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் பொதுமக்களிடம் நல்ல நிர்வாகம் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் யாரும் நேரடியாக காவல்துறையினரை தொடர்புகொள்ள கூடாது என்றும். அத்துறையை தான் கவனிப்பதால், எந்தப் புகாரையும் தன்னிடமே தெரிவிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று பலருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்போது அமைச்சராகியிருப்பவர்கள், அந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். துறையில் தவறுகள் நடைபெற்றால், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியுள்ளார்.