Type Here to Get Search Results !

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க பிரதமரின் “யுவா’ திட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின்படி, பல்துறைகளில் வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய உயர்கல்வித் துறை “யுவா’ வழிகாட்டி திட்டத்தை சனிக்கிழமை தொடங்கியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்ததுள்ளது. 
30 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கான இந்தத் திட்டத்தில் புத்தகம் படித்தல், புத்தகம் எழுதுதல் போன்ற கலாசாரங்களை ஊக்குவித்து இந்திய மற்றும் சர்வதேச அளவிலான எழுத்தாளர்களாக அவர்களை ஊக்குவிக்கும் பயிற்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி பிரதமர் மோடி தனது “மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசினார். “நாடு 75- வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இளம் தலைமுறையினர் அவர்களைப் பற்றி எழுத முன் வரவேண்டும். சிந்தனைகளையும் சிறந்த எண்ணங்களையும் கொண்ட தலைவர்களை எதிர்காலத்தில் உருவாக்கவும் இது வழிகாட்டும்’ என பிரதமர் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். 
2020 – புதிய கல்விக்கொள்கையும், இளையோரை மேம்படுத்துவதற்கும் கற்றல் சூழல் அமைப்பை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியது. இவைகளின் அடிப்படையில் இளம், வளரும், பல்துறை திறன் எழுத்தாளர்களுக்கான “யுவா” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 
இது குறித்து மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள “நேஷனல் புக் டிரஸ்ட்’ இந்தத் திட்டத்தை வரைமுறைகளின்படி செயல்படுத்தும் அமைப்பாக இருக்கும். இது முப்பது வயதுக்குட்ட இளம் தலைமுறையினருக்கான திட்டம். இதற்கு தேர்வு நடக்கும். 
இதுவரை புத்தகத்தில் இடம்பெற்று தெரியவராத வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அறியப்படாத இடங்கள், மறந்து போன இடங்கள், தேசிய இயக்கங்களில் பங்குபெற்றவர்கள் மற்றும் பல புதிய கண்டுபிடிப்புகள், புது உருவாக்கங்கள் ஆகிய தலைப்புகளில் புத்தகம் எழுதும் போட்டி நடத்தப்படும். இந்திய பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அறிவு முறையை மேம்படுத்துவதும் முறையில் இவை எழுதப்படவேண்டும். 
இதற்கான அகில இந்திய தேர்வு வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதிவரை நடத்தப்படும். இதில் 75 புத்தக எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு ஆறு மாத காலத்திற்கு மாதம் ரூ. 50,000 உதவித்தொகையும் அளிக்கப்படும். இந்த எழுத்தாளர்கள் பெயர் மற்றும் புத்தகங்கள் விவரங்கள் 2021 ஆகஸ்ட் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்களது புத்தகங்கள் அச்சுக்கு அனுப்பப்படும். இந்த புத்தகங்கள் தேசிய இளைஞர்கள் தினமான ஜனவரி 12 (2022) அன்று வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.