பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி டொமினிகா சிறையில் கண்கள் சிவந்தும் கைகளில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நீரவ் மோடியும் மெகுல் சோக்ஷியும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணையை மேற்கொண்டது. நீரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர் கொண்டு வருகிறார்.
அதே நேரம் மெகுல் சோக்ஷி கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாட்டில் 2018ஆம் ஆண்டு அவர் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.
தேடப்படும் நபர்களை நாடு கடத்தல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆண்டிகுவா இல்லை. எனினும் அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டுள்ளன.
மெகுல் சோக்ஷிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸும் இண்டர்போல் விடுத்தது. இந்த நிலையில் ஆண்டிகுவாவில் இருந்த சோக்ஷி திடீரென அங்கிருந்து மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல் இவர் பர்புடாவில் இருப்பதாக தகவல் வந்த நிலையில் அங்கும் அவரை காணவில்லை. டொமினிகா தீவில் இருந்த சோக்ஷி கடந்த 26ஆம் தேதி அதிரடியாக இன்டர்போல் போலீஸால் கைது செய்யப்பட்டார்.
அவர் டொமினிகாவில் போலீஸ் காவலில் உள்ளார். புதன்கிழமை வரை போலீஸ் காவலில் உள்ள அவருக்கு கொரோனா சோதனையும் மருத்துவ பரிசோதனையும் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சோக்ஷி கைதானவுடன் அவரை தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்ல ஆன்டிகுவா பிரதமர் மறுத்துவிட்டார்.
சோக்ஷியை இந்தியாவுக்கு அனுப்ப இந்திய அரசுடனும் டொமினிகா அரசுடனும் ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனி உத்தரவிட்டுள்ளார்.