தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இன்றியமையா பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி முடிய செயல்பட வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நியாயவிலை கடைகள் இன்று முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை யிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2,000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பினை 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்று செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தை வருகின்ற 11ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நியாய விலைக்கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டைதாரர்கள் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
11 முதல் 14 ஆம் தேதி வரை முற்பகல் நேரத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களின் வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.